ஷா ஆலம், நவ. 18 - முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் (ஆர்.எஸ்-1)
ஒட்டுமொத்த வளர்ச்சி ஏறக்குறைய 60 விழுக்காட்டை எட்டியுள்ளதாக
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை
மதிப்பிடுவதாக இருந்தால், 60 அல்லது 59 விழுக்காட்டை எட்டி விட்டது
அல்லது நிர்ணயித்த இலக்கை நாம் எட்டி விட்டோம் எனக் கூறுவேன்
என மாநில சட்டமன்றத்தில் அவர் இன்று தெரிவித்தார்.
மொத்தம் 183 அல்லது 65 திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகள் (பி.பி.ஐ.)
அமலாக்க நிலையில் உள்ளன. மேலும் 38 பி.பி.ஐ.க்கள் அமலாக்கத்திற்கு
முந்தைய கட்டத்தில் உள்ளதோடு அடுத்தாண்டு அதன் பணிகள்
தொடங்கவுள்ளன என்று அவர் சொன்னார்.
இது தவிர 30 பி.பி.ஐ.க்கள் முழுமையாக முற்றுப் பெற்றுவிட்டன.
அவற்றில் 24 இவ்வாண்டு முழுமையடைந்தன என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இன்னும் தொடங்கப்படாத ஒன்பது பி.பி.ஐ.க்கள் 2025ஆம்
ஆண்டு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர 38
பி.பி.ஐ.க்கள் அல்லது 13 விழுக்காடு ஊராட்சி மன்றங்கள் மற்றும் இதர
துறைகளிடமிருந்து விண்ணப்ப நடைமுறைக்காக காத்திருக்கின்றன
என்பதை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன் என அமிருடின் மேலும்
கூறினார்.
இந்த திட்டமேம்பாடுகளை நான்கு மைய அம்சங்களாக வகைப்படுத்த
விரும்புகிறேன். பொருளாதார மைய அம்சம் 44.47 விழுக்காடும், சமூக
மையம் அம்சம் 72 விழுக்காடும் நிலைத்தன்மை மைய அம்சம் 55.76
விழுக்காடும் நான்காவது மைய அம்சம் 61.69 விழுக்காடும் வளர்ச்சி
கண்டுள்ளன என்றார் அவர்.
மாநில அரசு தலைவராகக் கொண்டு கோர் ஆர்.எஸ்-1 என்ற
குழு அமைக்கப்பட்டுள்ளது. திட்ட மேம்பாடுகளை கண்காணிக்கும்
பணியை இக்குழு மேற்கொள்ளும். திட்டங்கள் திட்டமிட்ட இலக்கை
அடைந்ததை உறுதி செய்ய இக்குழு மாதந்தோறும் கூட்டத்தை நடத்தும்
என்று அவர் மேலும் தெரிவித்தார்.


