(ஆர்.ராஜா)
ஷா ஆலம், நவ. 18 - பந்திங் சட்டமன்றத் தொகுதி நிலையிலான தீபாவளி
பொது உபசரிப்பு நிகழ்வு நேற்று நவம்பர் 17ஆம் தேதி பந்திங், காலியான்
பிளாசாவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பந்திங் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதவளம் மற்றும் வறுமை
ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான வீ.பாப்பாராய்டுவின்
சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த உபசரிப்பில் மூவனங்களையும்
சேர்ந்த திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த பொது உபசரிப்பின் சிறப்பு அங்கமாக கல்வித் துறையில் அனுபவம்
வாய்ந்த விக்னேஸ்வரி சாம்பசிவம் அவர்களால் உருவாக்கப்பட்ட
எஸ்.பி.எம். தேர்வுக்கான தமிழ்மொழி வழிகாட்டிப் புத்தகங்கள்
மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
கோல லங்காட் மாவட்டத்திலுள்ள இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் 197
மாணவர்கள் இவ்வாண்டு எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் மொழியை பாடமாக
எடுக்கின்றனர். இம்மாணவர்களுக்கு தமிழ் மொழியைப் போதிக்கும் 11
ஆசிரியர்கள் உள்பட மொத்தம் 211 பேருக்கு இந்த வழிகாட்டி புத்தகங்கள்
பாப்பாராய்டு ஏற்பாட்டில் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்த வழிகாட்டிப் புத்தகங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள்,
மாணவர்கள் மற்றும் பிரதிநிதிகளிடம் பாப்பாராய்டு இந்நிகழ்வின் போது
நேடியாக ஒப்படைத்தார்.
மேலும், வரும் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வசதி குறைந்த குடும்பங்களுக்கு உணவுக் கூடைகளை வழங்கும் நிகழ்வும் இந்த உபசரிப்பின் ஒரு பகுதியாக இடம் பெற்றது.
அதோடு மட்டுமின்றி சமூகத்தின் அனைத்து நிலையிலான மக்களின்
நலனும் காக்கப்படுவதை உறுதி செய்யும் விதமாக உதவித் தேவைப்படும
தரப்பினருக்கு இலவசமாக காலணிகளும் வழங்கப்பட்டன.
அறுசுவை விருந்துசரிப்புடன் நடத்தப்பட்ட இந்த உபசரிப்பில்
வருகையாளர்களின் செவிகளுக்கும் கண்களுக்கும் இனிமை தரும்
வகையில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
மேலும், இந்த விருந்தில் கலந்து கொண்டவர்களில் 20 அதிர்ஷ்டசாலைகள்
கவர்ச்சிகரமான பொருள்களை பரிசாக பெறுவதற்குரிய வாய்ப்பினையும்
பெற்றனர். வருகையாளர்களுக்கு ரொக்கம் அன்பளிப்பும் 2025ஆம்
ஆண்டிற்கான நாள்காட்டியும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கவுன்சிலர்கள், இந்திய சமூகத் தலைவர்கள், கிராமத்
தலைவர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.


