கோலாலம்பூர், நவ. 18 - ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) உயர்
ஆணையரின் (யு.என்.சி.எச்.ஆர்.) அட்டையில் பொய்யான விபரங்களைச்
சேர்ந்த குற்றத்திற்காக மியன்மார் பிரஜை ஒருவருக்கு ஐந்தாண்டுச்
சிறைத்தண்டனையும் 30,000 வெள்ளி அபராத மும் விதிக்கப்பட்டது.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை வேலையில்லா நபரான
ரிசோடின் சம்சுடின் (வயது 31) ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து
செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஸ்ருள் டாருஸ் இத்தீர்ப்பை வழங்கினார்.
ரோசாருடினுக்கு எதிரான தண்டனை இன்று தொடங்கி அமலுக்கு
வருவதாக கூறிய நீதிபதி, அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால்
மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.
ஏமாற்றும் நோக்கில் ஹூமாரியா நோபி ஹூசேன் என்பவருக்குச்
சொந்தமான ஐ.நா. அகதிகளுக்கான அட்டையில் பொய்யான விபரங்களைச்
சேர்த்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. கடந்த செப்டம்ர் 18 மற்றும்
28ஆம் தேதிக்குட்பட்ட காலக்கட்டத்தில் செந்துலில் உள்ள அடுக்குமாடி
குடியிருப்பில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர் குற்றச்சாட்டை
எதிர்நோக்கியிருந்தார்.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கூடுதல் பட்சம் ஏழு ஆண்டுச்
சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் தண்டனைச்
சட்டத்தின் 468வது பிரிவின் கீழ் அவ்வாடவர் மீது குற்றச்சாட்டு கொண்டு
வரப்பட்டிருந்தது.
முன்னதாக, இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்
ஆர்.அர்விந்த், தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கடுமையான வழக்கு இது
என்பதால் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு கடுமையான தண்டனை
வழங்கும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.


