(ஆர்.ராஜா)
ஷா ஆலம், நவ. 18- இவ்வாண்டு ஜூன் மாதம் தொடங்கி மாநிலம்
முழுவதும் நடத்தப்பட்டு வரும் கார்னிவல் ஜெலாஜா ஜோப்கேர் வேலை
வாய்ப்புச் சந்தையின் வழி 982 பேர் வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
மாநில மக்களுக்கு வேலை வாய்ப்பினைப் பெற்றுத் தருவதற்கு மாநில
அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியை இந்த
எண்ணிக்கை புலப்படுத்துவதாக மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு கூறினார்.
மாநிலத்தில் வேலையின்மைப் பிரச்சினை எழக்கூடாது என்பதற்காக
சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து இந்த
திட்டத்தை தாங்கள் அமல்படுத்தி வருவதாக அவர் சொன்னார்.
இது வரை ஒன்பது வேலை வாய்ப்புச் சந்தைகளை மாநிலம் முழுவதும்
நடத்தியுள்ளோம். அவற்றில் எட்டு வேலை வாய்ப்புச் சந்தைகள் மாவட்ட
நிலையில் நடத்தப்பட்ட வேளையில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள்
கைதிகள் உள்ளிட்ட தரப்பினருக்கான பிரத்தியேக வேலை வாய்ப்புச்
சந்தை ஷா ஆலமில் அண்மையில் நடத்தப்பட்டது என்று அவர்
குறிப்பிட்டார்.
இவ்வாண்டிற்கான வேலை வாய்ப்புச் சந்தையின் இறுதி நிகழ்வு வரும்
டிசம்பர் 14ஆம் தேதி சபாக் பெர்ணம், டேவான் துன் ரசாக்கில்
நடைபெறும் என்று சிப்பாங் மாவட்ட நிலையிலான வேலை வாய்ப்புச்
சந்தையை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
தெரிவித்தார்.
பிடித்த வேலை கிடைக்கும் வரை காத்திராமல் கிடைக்கும் வேலை
வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும்படி உயர்கல்வியை முடித்த
மாணவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம அவர்கள்
அனுபவத்தை வளர்த்துக கொள்ளவும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்
கொள்ளவும் வாய்ப்பு கிட்டும் என்றார் அவர்.
சிலாங்கூர் தொழிலாளர் திறன் மேம்பாட்டுப் பிரிவின் (யு.பி.பி.எஸ்.)
ஏற்பாட்டிலான இந்த வேலை வாய்ப்புச் சந்தை கடந்த ஜூன் மாதம்
தொடங்கி இதுவரை உலு சிலாங்கூர், பெட்டாலிங், கோல லங்காட்,
கோம்பாக், உலு லங்காட், கிள்ளான், கோல சிலாங்கூர், சிப்பாங் ஆகிய
மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது.


