கிள்ளான், நவ.18 - மெகா சாலை சீரமைப்புத் திட்டம் அடுத்தாண்டும் தொடரப்படும் என 2025ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் வரவு செலவுத் திட்டத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பை மேரு மாநில சட்டமன்ற உறுப்பினர் மரியம் அப்துல் ரஷிட் வரவேற்றுள்ளார்.
தனது தொகுதியில் உள்ள பல சாலைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு இத்திட்டத்தில் சேர்க்கப்படும் எனத் தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
இந்த மெகா சாலை சீரமைப்புத் திட்டம் தொடரும் என்பதைக் அறிந்து நான் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைகிறேன். மேலும் இங்குள்ள பல சாலைகள் மோசமான நிலையில் இருப்பதால் இத்திட்டத்தில் மேரு தொகுதி விட்டுவிடப்படாது எனவும் எதிர்பார்க்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, ஜாலான் பைப் சாலை கவலையளிக்கக்கூடியதாக உள்ளது. ஏனெனில் இங்கு உயிரிழப்புகளை சம்பந்தப்படுத்திய விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
கனரக லோரிகள் சாலையை அதிகம் பயன்படுத்துவதால் அங்கு பள்ளங்கள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று மரியம் கூறினார்.
நேற்று இங்குள்ள சுல்தான் சுலைமான் ஸ்டேடியத்தில் நடைபெற்ற கிள்ளான் நிலையிலான வாகன பயன்பாடு இல்லா தினத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த வெள்ளியன்று 2025ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் வரவு செலவுத் திட்டத்தை வெளியிடப்பட்ட மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, சிலாங்கூர் முழுவதும் சாலையின் தரத்தை மேம்படுத்தும் முயற்சியாக அடுத்தாண்டும் மெகா மறுசீரமைப்புத் திட்டம் 5 கோடி வெள்ளி ஒதுக்கீட்டில் தொடரப்படும் என அறிவித்தார்.


