தாசேக் கெளுகோர், நவ. 17: நேற்று ஜாலான் அராகூடாவில் நடந்த சண்டையில், உள்ளூர் ஆடவரின் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டதன் தொடர்பான விசாரணையில் வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டார்.
மதியம் 2 மணியளவில் நடந்த சண்டையைத் தொடர்ந்து 28 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார் என பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ ஹம்சா அஹமட் கூறினார்.
"ஆரம்ப விசாரணையில் 52 வயதான பாதிக்கப்பட்டவர் சந்தேக நபரை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. ஆகவே, சந்தேக நபர் அவரை தாக்கி இரு கண்களையும் காயப் படுத்தினார்," என்று ஹம்சா அஹமட் கூறினார்.
மேல் சிகிச்சைக்காக அந்த நபர் கெப்பாலா பதாஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் வழக்கு தண்டனை சட்டம் 325 பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டது.
– பெர்னாமா


