உலு லங்காட், நவ 17: சிலாங்கூர் இலவச டியூஷன் திட்டத்தை செயல்படுத்த சிலாங்கூர் பட்ஜெட் 2025 இல் RM 10 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான மாநில அரசின் உறுதிப் பாடாகும்.
இந்த நிதியானது ஆரம்பப் பள்ளிகளில் இத்திட்டத்தை செயல் படுத்துவதை விரிவுபடுத்தும் என்று எம்பிஐ அறக்கட்டளையின் தலைவர் அஹ்மட் அஸ்ரி சைனால் கூறினார். மேலும், அடிப்படைத் திறன்களான வாசிப்பு, எழுதுதல் மற்றும் எண்ணுதல் (3M) ஆகியவற்றில் தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்களுக்கு உதவுதலை வலியுறுத்துகிறது.
"அடுத்த ஆண்டு தொடக்கப் பள்ளிகளுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்தும் எம்பிஐ அறக்கட்டளையின் விருப்பத்தை ஏற்றுக் கொள்வதற்கு டத்தோ மந்திரி புசார் மற்றும் மாநில அரசு அக்கறை காட்டுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், பாராட்டுகிறேன் என தெரிவித்தார்.
"இத்திட்டம் எஸ்பிஎம் மாணவர்களின் கல்வி முடிவுகளை மேம்படுத்த உதவியுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முயற்சி அடுத்த ஆண்டு வழங்கப்படும் RM 10 மில்லியன் மூலம் தொடரும்" என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு மொத்தம் 130,000 நான்காம் மற்றும் ஐந்தாம் படிவ மாணவர்கள் இத்திட்டம் மூலம் இலவச கற்றலில் கலந்து கொண்டனர்.
சிலாங்கூர் இலவச டியூஷன் என்பது மலாய், ஆங்கிலம், கணிதம், கூடுதல் கணிதம், அறிவியல் மற்றும் வரலாறு ஆகியவற்றுக்கான கூடுதல் வகுப்பாகும், இது சராசரி அல்லது மோசமான கல்வி செயல்திறன் கொண்ட குறைந்த வருமானம் உடைய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கானது.


