ஷா ஆலம், நவ. 15 - அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ரொக்க ஊக்குவிப்பாக
இரண்டு மாத சம்பளம் வழங்கப்படும் என சிலாங்கூர் அரசு
அறிவித்துள்ளது. இந்த சிறப்பு நிதியுதவி (பி.கே.கே.) இரண்டு கட்டங்களாக
வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
முதல் கட்டத் தொகை இவ்வாண்டு டிசம்பர் 30ஆம் தேதியும் இரண்டாம்
கட்டத் தொகை நோன்புப் பெருநாளை முன்னிட்டு அடுத்தாண்டு மார்ச்
மாதம் 25ஆம் தேதியும் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
முன்பு நாங்கள் ஒன்றரை மாத சிறப்பு ஊக்குவிப்பு நிதியை
அறிவித்திருந்தோம். அரை மாத சம்பளம் இவ்வாண்டு பிப்ரவரி மாதமும்
ஒரு மாத சம்பளம் நோன்பு பெருநாளுக்கு முன்னதாகவும் வழங்கப்பட்டது
என்று அவர் சொன்னார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்
திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
மாநிலத்தின் வளர்ச்சிக்கு அரசு ஊழியர்கள் கடந்தாண்டு ஆற்றிய
பங்களிப்பு மற்றும் கடும் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த சிறப்பு
ஊக்குவிப்பு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.


