ஷா ஆலம், நவ. 15 - சிலாங்கூர் மாநில அரசு கித்தா சிலாங்கூர்
ஆம்புலன்ஸ் திட்டத்தை தொடக்கியுள்ளது. இந்த புதிய முன்னெடுப்பின்
வாயிலாக அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் சேவை தேவைப்படும்
மாநில மக்களுக்கு உதவும் அதேவேளையில் அவர்களின் நிதிச்
சுமையையும் குறைக்க இயலும்.
தாபோங் சிலாங்கூர் பங்கிட் நிதியின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த
திட்டத்திற்கு 10 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த திட்டம் தொடக்கக் கட்டமாக சிலாங்கூரிலுள்ள நான்கு மாநகர்
மன்றப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்படும். அத்திட்டத்தின் ஆக்கத் திறன்
மற்றும் மக்களின் தேவையைப் பொறுத்து மற்ற ஊராட்சி
மன்றங்களுக்கும் அது விரிவுபடுத்தப்படும் என்று அவர் சொன்னார்.
பிரசித்தி பெற்ற ஆம்புன்ஸ் சேவை வழங்குநர்களான மலேசிய
செம்பிறைச் சங்கம் மற்றும் சென்ட் ஜோன் ஆம்புலன்ஸ் ஆகிய
தரப்பினரின் ஒத்துழைப்புடன் நாம் இலவச கித்தா சிலாங்கூர் ஆம்புலன்ஸ்
திட்டத்தை அடுத்தாண்டு தொடக்கவிருக்கிறோம். உதவித்
தேவைப்படுவோர் கட்டணம் குறித்த கவலையின்றி இச்சேவையை
பயன்படுத்தலாம் என்றார் அவர்.
மாநில சட்டமன்றத்தில் இன்று 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்
திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.


