ஷா ஆலம், நவ. 15 - பெர்ணம் ஜெயாவில் ராட்சத சோலார் (சூரிய
ஒளியீர்ப்புத் தகடு) திட்டம் உருவாக்கப்படவுள்ளது. 150மெகாவாட்
எரிசக்தியை உற்பத்தி செய்யக்கூடிய இத்திட்டம் பாயோங் சோலார்
திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த திட்டம் வோர்ல்ட்வைட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் மற்றும் தெனாகா
நேஷனல் துணை நிறுவனமான டிஎன்பி ரினிவபல் சென். பெர்ஹாட்
ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படுவதாக மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிடிருன் ஷாரி கூறினார்.
ஐயாயிரம் மெகாவாட்டிற்கும் அதிகமான மின் சக்தியை உற்பத்தி
செய்யக்கூடிய லார்ஜ் ஸ்கேல் சோலார் திட்ட குத்தகையைப்
பெறுவதற்கான ஐந்தாம் சுற்று டெண்டரிலும் வோர்ல்ட் வைட் நிறுவனம்
பங்கேற்றுள்ளதாக அவர் சொன்னார்.
சுமார் 140 கோடி வெள்ளி மதிப்பிலான அந்த குத்தகை கிடைக்கும்
பட்சத்தில் அந்நிய நேரடி முதலீடுகளை சிலாங்கூருக்கு கொண்டு
வருவதற்குரிய வாய்ப்பும் கிட்டும் என்று 2025ஆம் ஆண்டிற்கான வரவு
செலவுத் திட்டத்தை இன்று தாக்கல் செய்த போது அவர் குறிப்பிட்டார்.
முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள
முன்னெடுப்புகளில் ராட்சத சோலார் தோட்டங்களை அமைப்பதும்
உள்ளடங்கியுள்ளது. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு ஏதுவாக
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை
மேற்கொள்ளப்படுகிறது.


