ஷா ஆலம், நவ. 15 - சபாக் பெர்ணத்தில் தொடங்கி சிப்பாங் வழியாக
நெகிரி செம்பிலான் வரை செல்லக்கூடிய கித்தா சிலாங்கூர் இரயில்
தடத்தை மாநில அரசு அமைக்கவிருக்கிறது.
மொத்தம் 221 கிலோ மீட்டர் தொலைவைக் கொண்ட இந்த இரயில் தடம்
வெஸ்ட் போர்ட் துறைமுகம், புத்ரா ஹைட்ஸ், பெஸ்தாரி ஜெயாவிலுள்ள
சிலாங்கூர் பல்கலைக்கழகம் (யுனிசெல்) ஆகியவற்றுடன் இணைப்பையும்
கொண்டிருக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.
இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து
அறிந்து கொள்வதற்காக மாநில அரசு அறிக்கை ஒன்றைத் தயாரித்து
வரும் வேளையில் அவ்வறிக்கை எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரியில்
தயாராகும் என அவர் சொன்னார்.
இந்த கித்தா சிலாங்கூர் இரயில் தட நிர்மாணிப்பு சிலாங்கூர் மாநிலத்திற்கு
நேரடியாகவும் சமூக பொருளாதார ரீதியாகவும் அபரிமித நேர்மறைத்
தாக்கங்களைக் கொண்டு வரும் என்று 2025ஆம் ஆண்டிற்கான வரவு
செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் தெரிவித்தார்.
கார்பன் வெளியேற்றத்தை சுழியம் அளவுக்கு குறைக்கும் உதவும்
வகையிலான பொது போக்குவரத்து முறையை அமல் செய்யும் மாநில
அரசின் நோக்கத்திற்கு ஏற்ப இந்த கித்தா சிலாங்கூர் இரயில் திட்டம்
முன்னெடுக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தின் வாயிலாக இரயில் தடம் அமைந்துள்ள பகுதி நெடுக
பொருளாதாரம் புத்துயிர் பெறும் என்பதோடு சிலாங்கூர் மாநிலத்திற்கு
குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் பல்வேறு
அனுகூலங்களையும் கொண்டு வரும் என்றார் அவர்.


