லீமா, நவ. 15 - ஆசியான் மற்றும் ஏ.பி.ஏ.சி.-ஆசியான் கூட்டத்திற்கு மலேசியா அடுத்தாண்டு தலைமை வகித்தாலும் 10 உறுப்பினர்களைக் கொண்ட அந்த கூட்டமைப்பு மையக் கருத்தின் கீழ் ஒன்றாக இணைந்து செயல்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ஆசியானை-மையமாகக் கொண்ட முன்னெடுப்புகளை ஊக்குவிப்பதில் உறுதியான நிலைப்பாட்டிற்கு ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபெக்) வணிக ஆலோசனைக் குழுவிற்கு (ஏ.பி.ஏ.சி.) அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொருளாதாரத் தலைவர்கள் வாரத்தில் ஏ.சி.பி.சி. இந்தோனேசியாவால் திறக்கப்பட்ட இந்த விவேக முக்கியத்துவத் தளம், பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் பொருளாதார ஒற்றுமையை வளர்ப்பதற்கும் ஆசியன் பொருளாதாரங்களிடையே பகிரப்பட்ட செழுமையை மேம்படுத்துவதற்கும் ஏ.சி.பி.சி. மேற்கொண்ட அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
மலேசியாவின் வர்த்தக சமூகம் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டிய நேரம் இது என்று அன்வார் கூறினார்.
நாங்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்கிறோம். இந்தோனேசியா முந்துவது பற்றியோ அல்லது மலேசியா முந்துவது பற்றியோ எந்த கேள்வியும் எழல்லை. இந்த ஏற்பாடு தனித்துவமானது. அது செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவது எங்கள் கடமையாகும் என்று அவர் ஏ.சி.பி.சி. உடனான ஏபெக் தலைவர்கள் உரையாடலின் போது கூறினார்.
.
இந்நிகழ்வில் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஸப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ், ஏ.பி.ஏ.சி. தலைவர் டத்தோ ரூபன் எமிர் ஞானலிங்கம், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ மற்றும் இந்தோனேசியாவின் ஏ.பி.ஏ.சி. தலைவர் அனிந்த்யா நோவியன் பக்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஆசியான்-ஏ.பி.ஏ.சி. அமைப்பு ஏழு ஆசியான் உறுப்பினர்களை உள்ளடக்கியது: மலேசியா, புருணை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய அந்நாடுகள் ஏபெக்கின் ஒரு பகுதியாகவும் விளங்குகின்றன.


