புத்ராஜெயா, நவ 15 : நவம்பர் 3 முதல் 9 வரையிலான 45வது தொற்றுநோயியல் வாரத்தில் (ME28) டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தோடு (1,346) ஒப்பிடும்போது 1,583ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் 2 இறப்புகளும் ஏற்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 103,371 டிங்கி சம்பவங்கள் பதிவான நிலையில்
இவ்வாண்டு அதன் எண்ணிக்கை 112,833ஆக உள்ளது என்று சுகாதார இயக்குநர்
ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார்.
இவ்வாண்டு மொத்தம் 104 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 2023 இல் 80 இறப்புகள் மட்டுமே பதிவாகி இருந்தன என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
மேலும், தொற்றுநோயியல் 44வது வாரத்தில் 39 ஹாட்ஸ்பாட் இடங்கள்
பதிவாகியுள்ளன என்று அவர் கூறினார்.
அதாவது சிலாங்கூரில் 25 இடங்களும், புத்ராஜெயா, கோலாலம்பூரில் 5 இடங்களும், நெகிரி செம்பிலானில் 4 இடங்களும், பினாங்கு, சபாவில் தலா இரண்டு இடங்களும் மற்றும் பேராக்கில் ஓர் இடமும் பதிவாகியுள்ளன.
– பெர்னாமா


