ஷா ஆலம், நவ. 15 - சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்திற்கு மாநில அரசின் சார்பில் 200,000 வெள்ளி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்குவது உள்ளிட்ட கல்வி சார்ந்த மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்த மானியம் வழங்கப்படுவதாக மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு கூறினார்.
மாநிலத்திலும் கூட்டரசு நிலையிலும் ஒரே அரசாங்கம் ஆட்சி செய்வதற்குரிய சூழல் முதன் முறையாக ஏற்பட்டுள்ள நிலையில் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்திற்கும் மாநில அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பு வலுப்பெற்று வருவதாக அவர் சொன்னார்.
இந்த ஒத்துழைப்பை தமிழ்ப்ள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கு பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். இதன் அடிப்படையில் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் ஒப்புதலின் பேரில் தலைமையாசிரியர் மன்றத்திற்கு மானியம் வழங்கப் படுகிது என்று அவர் குறிப்பிட்டார்.
மாநிலத்திலுள்ள 99 தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ள 50 லட்சம் வெள்ளி வருடாந்திர மானியத்திலிருந்து இந்த 200,000 வெள்ளி தலைமையாசிரியர் மன்றத்திற்கு வழங்கப்படுகிறது என்றார் அவர்.


