ஷா ஆலம், நவ. 14 - நாளை தொடங்கும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தொடரில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டமும் தாக்கல் செய்யப்படுவதால் இது அடர்த்தியான நிகழ்ச்சி நிரலைக் கொண்ட கூட்டத் தொடராக விளங்குகிறது.
இரண்டு வாரங்களுக்குத் திட்டமிடப்பட்ட இக்கூட்டத் தொடரில் மாநில சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து 854 வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வ கேள்விகள் பெறப்பட்டுள்ளதாக சபாநாயகர் லாவ் வெங் சான் கூறினார்.
இந்த கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. ஆண்டுக்கு மூன்று முறை சட்டமன்றம் கூடும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. கடைசியில் நடைபெறுவது வரவு செலவு தாக்கலுடன் நடைபெறும் கூட்டமாகும்.
இக்கூட்டத் தொடரில் கூடுதல் விநியோக மசோதாவும் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கிறேன். ஆகவே, இகா கூட்டம் மிகவும் அடர்த்தியான நிகழ்வுகளை கொண்டிருக்கும் என்பதை இது மறைமுகமாக காட்டுகிறது என்று அவர் கூறினார்.
அடுத்தாண்டிற்கான மாநில பட்ஜெட் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), கல்வி, உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல், நிர்வாகம் மற்றும் படைப்பாற்றல் பொருளாதாரம் போன்ற பல அம்சங்களில் கவனம் செலுத்தும்.
சிலாங்கூர் அரசின் 2025 வரவு செலவுத் திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நாளை மாலை 3.00 மணிக்கு தாக்கல் செய்வார்.
இந்த பட்ஜெட் தொடர்பான தகவல்களை selangorkini.my, சிலாங்கூர் ஜெர்னல், சிலாங்கூர்கினி மாண்டரின், சிலாங்கூர்கினி தமிழ் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் பட்ஜெட் நேரடி ஒளிபரப்பை https://selangortv.my/ என்ற இணைப்பு மற்றும் MYTV ஆகியவற்றோடு Facebook MediaSelangor, Instagram, X, Telegram, TikTok போன்ற சமூக ஊடகங்கள் வழியாகவும் காணலாம்.


