கிள்ளான், நவ. 14 - சிலாங்கூரில் 354 இடங்கள் வெள்ளம் அபாயம்
உள்ளவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 77 இடங்கள்
கிள்ளானில் உள்ளதாக பேரிடர் மேலாண்மைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி கூறினார்.
கிள்ளானை அடுத்து உலு லங்காட்டில் 55 இடங்களும் கோல சிலாங்கூரில்
43 இடங்களும் பெட்டாலிங்கில் 52 இடங்களும் சிப்பாங்கில் 43 இடங்களும்
கோம்பாக்கில் 35 இடங்களும் கோல லங்காட்டில் 27 இடங்களும் உலு
சிலாங்கூரில் 12 இடங்களும் சபாக் பெர்ணமில் 11 இடங்களும்
அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் அப்பகுதிகளை வெள்ளம் அபாயம்
உள்ளவையாக வகைப்படுத்தியுள்ளோம். இது வரை அப்பகுதிகள் வெள்ளப்
பிரச்சினையை எதிர்நோக்கவில்லை. இருப்பினும் வெள்ளத் தடுப்புத்
திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பகுதிகளாக அவற்றை பதிவு
செய்துள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.
மாநிலத்தில் வெள்ளம் ஏற்படும் பகுதிகளாக 79 இடங்கள்
வகைப்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இங்கு வெள்ளம்
ஏற்படுவதை தடுப்பதற்கான தடுப்புத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு
வருகின்றன என்றார்.
திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தாமான் புக்கிட் ராஜா 2 பகுதிக்கு நேற்று
வருகை மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.
தங்களிடம் உள்ள ஆற்றலைப் பயன்படுத்தி வெள்ளப் பேரிடரை
எதிர்கொள்வதற்கான நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
என்று அவர் மேலும் சொன்னார்.
வெள்ளப் பேரிடர் மேலாண்மைப் பிரிவுகள், மாவட்ட மற்றும் ஊராட்சி
மன்ற அதிகாரிகளுடன் இணைந்து வெள்ளத் தடுப்புத் திட்டங்களை
வரைந்து வருகிறோம் என்று அவர் கூறினார்.


