கோலாலம்பூர், நவ. 13 - பொது மக்கள் மத்தியில் சரியான மொழி
ஆளுமையை ஊக்குவிக்கும் நோக்கில் தேசிய மொழி வளர்ப்பு
நிறுவனமான டேவான் பகாசா டான் புஸ்தாகா (டி.பி.பி.) மூன்று சமூக
ஊடகப் பிரபலங்களை நியமித்துள்ளது.
அந்த மூன்று பிரபலங்களில் செராஸ், கொலம்பியா ஆசியா
மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வரும்
டாக்டர் எஸ். மலர் சாந்தியும் ஒருவராவார் என்று டேவான் பகாசாவின்
தலைமை இயக்குநர் ஹஸாமி ஜொஹாரி கூறினார்.
மொழியை இனியும் பாரம்பரிய வழியில் பிரபலப்படுத்த முடியாது
என்பதால் நடப்பு வளர்ச்சியின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் டேவான்
பகாசாவின் நோக்கத்திற்கு ஏற்ப இந்த பிரபலங்களின் நியமனம்
அமைந்துள்ளது என்று அவர் சொன்னார.
நாம் புதிய வழியில் நகர வேண்டும். அதே சமயம் (பொது மக்களுக்கு)
வழிகாட்டுதலும் பயிற்சியும் வழங்க வேண்டும் என்றார் அவர்.
மொழி வளர்ப்பில் ஊடகங்கள் வலுவான ஆதிக்கத்தைக் கொண்டுள்ளதால்
அவசியம் ஏற்படும் பட்சத்தில் முறையான மொழி பயன்பாட்டு
அடித்தளத்தை வழங்குவதற்காக ஊடகவியலாளர்களுடன் சிறப்பு அமர்வை
நடத்துவோம் என அவர் குறிப்பிட்டார்.
டேவான் பகாசா டான் புஸ்தாகா ஏற்பட்டில் நேற்றிரவு இங்குள்ள விஸ்மா
டி.பி.பி.யில் நடைபெற்ற பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு விருந்து
நிகழ்வின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.


