கிள்ளான், நவ. 13 - மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஏற்பட்ட
திடீர் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு ஊராட்சி மன்றங்கள்
மேற்கொண்ட துரித நடவடிக்கைகள் குறித்து மாநில அரசு மனநிறைவு
தெரிவித்துள்ளது.
வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் போக்குவரத்தை சீர் செய்வது உள்பட
மேலும் சில அம்சங்களை அவை மேம்படுத்தலாம் என்று ஊராட்சித்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம் கூறினார்.
ஊராட்சி மன்றங்களின் துரித நடவடிக்கை குறித்து நான் மனநிறைவு
கொள்கிறேன். அதே சமயம் முயற்சிகளை மேலும் அதிகப்படுத்தலாம்.
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதிலும் அவை உதவி புரியலாம்
என்றார் அவர்.
வடகிழக்கு பருவமழை மற்றும் கடல் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில்
மாநில மக்கள் குறிப்பாக கிள்ளான் வட்டாரத்தில் வசிப்பவர்கள் அலட்சியம்
காட்டாமல் எந்நேரமும் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக்
கொள்கிறேன் என்றார் அவர்.
2025 சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் ஆண்டு இயக்கத்தை முன்னிட்டு
இங்குள் ஜி.எம். பேரங்காடியின் முகப்பிடத்தில் சிறப்பு பிரச்சார இயக்கத்தை
தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழையினால் மோசமான பாதிப்பு ஏற்படுவதைத்
தவிர்ப்பதற்காக மாநில அரசு பல மாதங்களுக்கு முன்னரே தயார் நிலை
நடவடிக்கைளை எடுக்கத் தொடங்கி விட்டதாக இங் சொன்னார்.
தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தை நாம் முன்கூட்டியே
அறிந்திருக்கிறோம். சிலாங்கூர் மாநில மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்கனவே எடுக்கத் தொடங்கி விட்டோம் என்றார் அவர்.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக முதிர்ந்த
மரங்களை அகற்றுவதற்கு கிள்ளான் அரச மாநகர் மன்றத்திற்கு 50 லட்சம்
வெள்ளி ஒதுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அப்பணி கடந்த மாதம்
முற்றுப் பெற்றது என்றார்.


