ஷா ஆலம், நவ 12- எதிர்வரும் வியாழன் முதல் ஐந்து நாட்களுக்கு கோல லங்காட் வட்டாரத்திலுள்ள பல பகுதிகளில் கடல் பெருக்கும் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோலக் கிள்ளான் நிலையத்தின் அறிக்கையின் அடிப்படையில் அலைகள் 5.5 மீட்டர் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகக் கோல லங்காட் நகராண்மைக் கழகம் தெரிவித்தது.
தங்களைச் சுற்றியுள்ள இயற்கை சூழல் குறித்து பொதுமக்கள் கவனமாகவும் விழிப்புடனும் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் அதேவேளையில் கோல லங்காட் மாவட்ட பந்தாஸ் அமைப்பின் தொலைபேசி எண்களை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள் என்று நகராண்மைக் கழகம் தனது முகநூல் பதிவில தெரிவித்தது.
விளக்கங்கள் அல்லது தகவல்களுக்கு 012-300 4256 கோல லங்காட் ஹாட்லைன் எண்களில் அல்லது 012-300 4130 என்ற எண்களில் புகார் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.


