கோலாலம்பூர், நவ. 12 - வாகன உரிமை வரியை அடிப்படையாகக்
கொண்டு ரோன்95 இலக்கு மானிய திட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கை
காரணமாக அந்த உதவியை தகுதி உள்ள சில குடும்பங்களும் பெற
இயலாத நிலை ஏற்படும் என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி
கூறினார்.
பி60 குடும்பங்களில் சுமார் 40 விழுக்காட்டினர் சொந்த வாகன
உரிமையைக் கொண்டிராமலிருப்பது பாடு எனப்படும் மத்திய தரவு
மையத்தில் உள்ள மலேசிய பிரஜைகள் மற்றும் நிரந்தர வசிப்பிடத் தகுதி
உள்ளவர்கள் தொடர்பான தரவுகள் காட்டுகின்றன என்று அவர் சொன்னார்.
அவர்கள் மற்றவர்களின் வாகனங்களைப் பயன்படுத்தக்கூடும். இது நமக்கு
சிக்கலை உண்டாக்கியுள்ளது. வாகனப் பதிவைப் பயன்படுத்துவது
சிறப்பானது என பரிந்துரைக்கப்பட்டாலும் உண்மை நிலவரம்
என்னவென்றால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச்
சேர்ந்தவர்கள் வாகனப் பதிவைக் கொண்டிராதவர்களாகவும் பிறர் பெயரில்
உள்ள வாகனங்களைப் பயன்படுத்துபவர்களாகவும் உள்ளனர்.
மானிய டீசல் திட்டத்தை அமல்படுத்தும் போதும் இதே போன்ற
பிரச்சினையை நாம் எதிர்நோக்கினோம். களத்தில் காணப்படும் வேறுபட்ட
நடைமுறைகள் காரணமாக பெரிய அளவில் வேற்றுமை காணப்படுவதை
தரவுகள் காட்டுகின்றன. அவர்கள் தொடர்ந்து தவணைப் பணத்தை
செலுத்தி வருகின்றனர் அல்லது வேறு பெயர்களைப் பயன்படுத்துகின்றனர்
என்றார் அவர்.
மக்களவையில் இன்று அமைச்சர் கேள்வி நேரத்தின் போது பூலாய்
தொகுதி உறுப்பினர் சுஹைசான் கையாட் எழுப்பிய துணைக் கேள்விக்கு
பதிலளிக்கையில் ரபிஸி இவ்வாறு சொன்னார்.
ரோன்95 மானியம் அமலாக்கம் தொடர்பான எந்தவொரு பரிந்துரையும்
நடவடிக்கைச் செலவினத்தையும் முறைகேடுகளுக்கான சாத்தியத்தையும்
கொண்டிருப்பதைக் கருத்தில் கொள்கையில் மானிய பெட்ரோல்
திட்டத்திற்கான எந்த செயல்முறையும் மிகச் சிறந்ததாக இல்லை
என்பத்தை அரசாங்கம் உணர்ந்துள்ளது என்று அவர் சொன்னார்.


