ஷா ஆலம், நவ. 11- தேசிய செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) புத்தாக்க
மையம் (என்ஐஏஓ) அடுத்த மாதம் தொடங்கப்படும். அந்த புதிய
தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய சவால்கள் உள்பட அனைத்து
அம்சங்களையும் ஆராயும் நோக்கில் இந்த மையம் அமைக்கப்படுகிறது.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் துரித வளர்ச்சியை குறிப்பாக இவ்வட்டார
நாடுகள் உன்னிப்பாக கவனித்து வரும் தகவல் கசிவை இந்த
முன்னெடுப்பு கவனத்தில் கொள்ளும் என்று டிஜிட்டல் அமைச்சர்
கோபிந்த் சிங் டியோ கூறினார்.
நாங்கள் இவ்விவகாரத்தை (ஏ.ஐ. சம்பந்தப்பட்ட தரவு கசிவு) நாங்கள்
உணர்ந்துள்ளோம். அதன் காரணமாகவே தேசிய ஏ.ஐ. அலுவலகத்தை
திறந்துள்ளோம். ஏ.ஐ. மூலம் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்வது
தொடர்பான ஆய்வினை மேற்கொள்வது இதன் பணிகளில் ஒன்றாகும் என
அவர் தெரிவித்தார்.
இத்தகைய சூழ்நிலைகளைக் கையாள்வதற்கு ஏதுவாக சட்டங்களை
இயற்றுவது அல்லது நெறிமுறையை நிர்ணயிப்பது போன்ற
அம்சங்களையும் இந்த தேசிய ஏ.ஐ. மையம் கவனத்தில் கொள்ளும் என்று
அவர் குறிப்பிட்டார்.
மக்களவையில் இன்று ஏ.ஐ. வழி தனி மனித தரவுகள் கசிவதைத் தடுக்க
சிறப்புச் சட்டங்களை உருவாக்கும் அரசாங்கத்தின் நோக்கம் குறித்து
ரொம்பின் உறுப்பினர் டத்தோ அப்துல் காலிப் அப்துல்லா எழுப்பிய
கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.
ஏ,ஐ. தொடர்பான மேம்பாடுகளை கண்காணிக்கும் மற்றும் இலக்கவியல்
பொருளாதாரத்தை வலுப்படுத்தும் அமைப்பாகவும் இந்த மையம்
செயல்படும் என அவர் குறிப்பிட்டார்.
பொதுச் சேவையை அதிகரித்து நீடித்த மேம்பாட்டிற்கு வழி வகுக்கும்
அதே வேளையில் அச்சுறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்திலிருந்து
அனைத்து அம்சங்களையும் காக்கும் பொறுப்பினையும் இந்த அமைப்பு
வகிக்கும் என்றார் அவர்.


