குவாந்தான், நவ. 11- பகாங் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள்
எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அந்த இயற்கை
பேரிடரில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் லிப்பிஸ்
இணைந்துள்ளது.
இன்று காலை 9.00 மணி நிலவரப்படி லிப்பிஸ் மாவட்டத்தில் புதிதாக இரு
துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக சமூக நலத் துறையின்
பேரிடர் தகவல் அறிக்கை கூறியது.
கெச்சாய் தியு தேசிய பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள துயர் துடைப்பு
மையத்தில் 61 குடும்பங்களைச் சேர்ந்த 218 பேரும் செமாய் பக்தி பெல்டா
கெச்சாவ் மண்டபத்தில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேரும் தங்க
வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.
நேற்று காலை முதல் வெள்ளப் பாதிப்பை எதிர்நோக்கியிருக்கும் ரவுப்
மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66 குடும்பங்களைச் சேர்ந்த
223 பேராக உயர்வு கண்டுள்ளது. அவர்கள் அனைவரும் ஆறு துயர்
துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர். நேற்று இரு துயர் துடைப்பு
மையங்களில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 99 பேர் மட்டுமே தங்க
வைக்கப்பட்டிருந்தனர்.
இன்று காலை 9.00 மணி வரை லிப்பிஸ் மற்றும் ரவுப் மாவட்டங்கள்
உள்பட மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த
எண்ணிக்கை 127 குடும்பங்களைச் சேர்ந்த 441 பேராக உயர்ந்துள்ளது.
அவர்கள் அனைவரும் எட்டு வெள்ள நிவாரண மையங்களில்
தங்கியுள்ளனர்.
இதனிடையே, பகாங்கிலுள்ள ஆறு ஆறுகளில் நீர் மட்டம் எச்சரிக்கை
அளவை எட்டியுள்ளதாக வெள்ளத் தகவல் அகப்பக்கம் தெரிவித்தது.


