கோலாலம்பூர், நவ.11- இன்று நடைபெறவுள்ள சிறப்பு அரபு-இஸ்லாமிய உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சவுதி அரேபியாவின் ரியாத் நகர் வந்தடைந்தார்.
பிரதமர் எகிப்தின் கெய்ரோவில் இருந்து ரியாத்தில் உள்ள மன்னர் காலிட் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்தார் என்று வெளியுறவு அமைச்சு தனது எக்ஸ் பதிவில் கூறியது.
விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் அன்வாரை ரியாத் பிராந்தியத்தின் துணை ஆளுநர் இளவரசர் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் அப்துல்லாஜிஸ் மற்றும் ரியாத் பிராந்திய மேயர் இளவரசர் டாக்டர் பைசல் பின் அப்துல் அஜிஸ் பின் அய்யாஃப் ஆகியோர் வரவேற்றனர்.
பிரதமர் அன்வாருக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
நேற்று கெய்ரோவிலிருந்து புறப்படுவதற்கு முன்னர், பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் இஸ்ரேலிய ஸியோனிச ஆட்சியினர் நடத்திவரும் ஆக்கிரமிப்பு மற்றும் மனிதாபிமான அற்ற துன்புறுத்தல்களுக்கு எதிரான மலேசிய மக்களின் குரல் மற்றும் ஆணையை பிரதிபலிப்பதில் தனது உறுதியான நிலைப்பாட்டை அன்வார் வெளிப்படுத்தினார்.
முன்னரே திட்டமிடப்பட்ட மலேசிய மற்றும் எகிப்திய தூதுக்குழுக்களுடன் தொடர் நிகழ்ச்சிகளைத் தொடர்வதற்காகப் பிரதமர் கெய்ரோவுக்கு மீண்டும் திரும்பவுள்ளார்.


