கோலாலம்பூர், நவ 8: நவம்பர் 1ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு மோட்டார் சைக்கிள் சோதனை நடவடிக்கை போது பல்வேறு குற்றங்களுக்காக சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) மொத்தம் 28,811 நோட்டிஸ்களை வெளியிட்டது.
சோதனை நடவடிக்கையின் ஏழாவது நாள் வரை, ஓட்டுநர் உரிமம் மற்றும் சாலை வரி இல்லாமல் இருப்பது ஆகியவை அதிகம் கண்டறியப்பட்ட குற்றங்கள் ஆகும் என ஜேபிஜே தலைமை அதிகாரி டத்தோ ஏடி ஃபேட்லி ரம்லி கூறினார்.
இதுவரை மொத்தம் 59,116 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் பல்வேறு குற்றங்களுக்காக 8,988 மோட்டார் சைக்கிள்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 282 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
''ஓட்டுநர் உரிமம் மற்றும் சாலை வரி மட்டும் இல்லாத குற்றத்துக்காக, மொத்தம், 23,895 சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன. நாங்கள் தடுத்து நிறுத்தும்போது,சாலை வரியை புதுப்பிக்க நேரமில்லை, உரிமம் பெற நேரமில்லை என, பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.
"சாலையில் பயணிக்கும் அனைவருக்கும் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை வரி மற்றும் காப்பீட்டை புதுப்பிக்குமாறு நான் அறிவுறுத்துகிறேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அது வாகனம் ஓட்டுபவர்களுக்கு மட்டுமின்றி மற்ற சாலை பயணிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும்," என்று அவர் கூறினார்.
- பெர்னாமா


