ஷா ஆலம், நவ 8: சமூக நலத்துறையின் (ஜேகேஎம்) கீழ் பதிவு செய்ய மழலையர் பள்ளி உரிமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு மானியத்தை மாநில அரசு அறிமுகப் படுத்தியுள்ளது.
இத்திட்டத்திற்கு RM400,000 ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.இணைய மானிய விண்ணப்பம் எதிர்வரும் டிசம்பரிலிருந்து மழலையர் பள்ளி உரிமையாளர்களுக்கு திறக்கப்படும்.
அனைத்து மழலையர் பள்ளிகளும் பதிவு செய்யப்படுவதையும் சட்டத்திற்கு இணங்குவதையும் உறுதிசெய்யும் முயற்சியில் மாநில அரசால் முதல்முறையாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்று சமூக நல ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் சாரி கூறினார்.
புள்ளி விபரங்களின் அடிப்படையில், கடந்த ஜூலை வரை 128 மழலையர் பள்ளிகள் இன்னும் பதிவு செய்யப்படாமல் உள்ளன.
"பதிவை ஊக்குவிக்கும் வகையில், உள்ளாட்சி மட்டத்தில் நிதி அல்லது ஒப்புதல் உள்ளிட்ட சில சிக்கல்களை எதிர்நோக்கும் மழலையர் பள்ளிகளை நடத்துபவர்களுக்கு இந்த மானியத்தை அறிமுகப்படுத்துகிறோம்.
"மழலையர் பள்ளிகளின் தேவைகளுக்கு ஏற்ப மானியக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. ஆனால், ஒரு மழலையர் பள்ளிக்கு அதிகபட்ச ஒதுக்கீடு RM5,000 ஆகும்," என்று அவர் கூறினார்.
முன்னதாக, வரி விலக்கு அம்சங்கள் உட்பட பல்வேறு சலுகைகளை பெறுவதற்கு மழலையர் பள்ளிகளை நடத்துபவர்களை சமூக நல துறையிடம் பதிவு செய்யுமாறு அன்பால் அழைப்பு விடுத்தார்.


