பாலிக் பூலாவ், நவ. 6 - மோசடிக் கும்பலுக்கு வங்கிக் கணக்குகளை
வழங்கியதன் மூலம் 54,000 வெள்ளி இழப்பு ஏற்படக் காரணமாக இருந்த
சந்தேகத்தின் பேரில் இரு ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்ற
புலனாய்வு பிரிவினர் மாநிலத்தின் இரு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட
சோதனை நடவடிக்கைகளில் அவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக
பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சஸாலி ஆடாம்
கூறினார்.
முதல் சம்பவத்தில், தொலைபேசி மோசடிக் கும்பலிடம் வங்கிக் கண்க்கை
வழங்கிய சந்தேகத்தின் பேரில் 25 வயது ஆடவர் புக்கிட் மெர்தாஜமில்
கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்த மோசடியில்
பாதிக்கப்பட்ட நபர் 30,000 வெள்ளியை இழந்ததாக அவர் குறிப்பிட்டார்.
பொருள் விநியோகிப்பாளர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர்
பாதிக்கப்பட்ட ஆடவரை தொலைபேசி வழி அழைத்து சட்டவிரோதப்
பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்ட காரணத்தினால் உங்கள் பெயர் கருப்பு
பட்டியலிடப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
அதன் பின்னர் அந்த தொலைபேசி இணைப்பு போலீஸ் அதிகாரி எனக்
கூறிக் கொண்ட நபருக்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணை
மேற்கொள்வதற்கு ஏதுவாக அனைத்து சேமிப்பு பணத்தையும் குறிப்பிட்ட
ஒரு வங்கி கணக்கிற்கு மாற்றும்படி அந்த அதிகாரி பணித்துள்ளார்.
இதனை நம்பிய அந்த ஆடவர் 30,000 வெள்ளியை சம்பந்தப்பட்ட வங்கி
கணக்கிற்கு மாற்றியுள்ளார். மேலும் பணத்தை வங்கி கணக்கிற்கு
மாற்றும்படி பணிக்கப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகமடைந்த பாதிக்கப்பட்ட நபர் இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளார் என்று சஸாலி பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
மற்றொரு சம்பவத்தில் ஆடவர் ஒருவருக்கு 24,000 வெள்ளி இழப்பு
ஏற்படக் காரணமாக இருந்த மோசடிக் கும்பலிடம் வங்கிக் கணக்கை
ஒப்படைத்த சந்தேகத்தின் பேரில் தாசேக் குளுகோரைச் சேர்ந்த ஆடவர்
ஒருவரை தாங்கள் விசாரணைக்காக கைது செய்துள்ளதாக அவர்
சொன்னார்.
இவ்விரு ஆடவர்களுக்கும் எதிராக குற்றவியல் சட்டத்தின் 420வது
பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும்
தெரிவித்தார்.


