ஷா ஆலம், நவ. 6 - ஷா ஆலம் விளையாட்டுத் தொகுதியின்
(கே.எஸ்.எஸ்.ஏ.) தொடக்கக் கட்ட பணிகள் 45 விழுக்காடு
பூர்த்தியடைந்துள்ளதாக அதன் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்தது.
அந்த அதிநவீன விளையாட்டுத் தொகுதியின் கட்டமைப்புப் பணிகள்
விரைவில் வடிவம் பெறத் தொடங்கும். அந்த புதிய வளாகம் உள்நாட்டு
கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும்
அதேவேளையில் ஆண்டு முழுவதும் மக்களுக்கு அற்புத நிகழ்வுகளை
வழங்கும் என்று அது தனது எக்ஸ் தளத்தில் கூறியது.
இந்த விளையாட்டு வளாகத்தின் அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் காட்டிய
பொறுமைக்கு நாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். மிக
நெருக்கத்தில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் அசௌகர்யத்தைக்
குறைக்க நாங்கள் பாடுபடுகிறோம் என கே.எஸ்.எஸ்.ஏ. நிர்வாகம்
குறிப்பிட்டது.
சுற்றுவட்டார மக்களின் பொறுமைக்கு நாங்கள் நன்றி கூறும் அதே
வேளையில் இரைச்சல் மற்றும் தூசு கட்டுப்படுத்தப்பட்ட அளவில்
இருப்பதை உறுதி செய்வதில் ஊராட்சி மன்றம் மற்றும்
குத்தகையாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என அது
தெரிவித்தது.
நமக்கான சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கி வரும் எங்களுக்கு நீங்கள்
வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றி. புதிய தகவல்களுக்கு காத்திருங்கள் என
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
ஷா ஆலம் அரங்கை உடைக்கும் பணி இவ்வாண்டு ஜூலை மாதம் 1ஆம்
தேதி தொடங்கி அடுத்தாண்டு மே மாதம் வரை மேற்கொள்ளப்படும் என்று
இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி கூறியிருந்தார்.
மொத்தம் 81,372 பேர் அமரக்கூடிய ஷா ஆலம் விளையாட்டரங்கம் கடந்த
1994ஆம் ஆண்டு ஜூலை மாதம் திறக்கப்பட்டது. புதிய விளையாட்டுத்
தொகுதியை நிர்மாணிப்பதற்கு ஏதுவாக அந்த அரங்கை இடிக்கும் பணிகள்
தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


