கோலாலம்பூர், நவ 6 - மக்கள் எதிர்நோக்கும் வாழ்க்கைச் செலவின
அதிகரிப்பு, மனிதர்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான நெருக்கடி,
மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவின் (ஜாக்கிம்) ஹலால்
சான்றிதழ் உள்ளிட்ட விவகாரங்கள் இன்றைய மக்களவைக் கூட்டத்தில்
விவாதிக்கப்படும்.
இன்றைய கேள்வி நேரத்தின் போது வாழ்க்கைச் செலவின
அதிகரிப்பினால் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப்
போக்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைள் குறித்து
ஆராவ் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர்
ஷஹிடான் காசிம் உள்நாட்டு வர்த்தம் மற்றும் வாழ்க்கைச் செலவின
அமைச்சரிடம் கேள்வியெழுப்புவார்.
பொருள்களின் விலையேற்றத்திற்கு காரணமாக இருக்கும் கார்ட்டல்
எனப்படும் முறையற்ற வணிகக் கும்பலின் ஆதிக்கத்தை முறியடிப்பதற்கு
அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் மற்றும் வாழ்க்கைச்
செலவின பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு அமைச்சுகளிடையிலான
ஒத்துழைப்பு குறித்தும் அவர் வினா தொடுப்பார்.
மனிதர்களுக்கும் புலிகளுக்கும் இடையே நிலவும் நெருக்கடி குறிப்பாக
குடியிருப்பு பகுதிகளுக்குள் அந்த வன விலங்குகள் நுழையும்
விவகாரத்திற்கு தீர்வு காண அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள்
குறித்து புக்கிட் பெண்டேரா தொகுதி ஹராப்பான் உறுப்பினர் ஷியெர்லினா
ரஷிட் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை
அமைச்சரிடம் வினவுவார்.
உணவகங்கள் குறிப்பாக முஸ்லீம்கள் வருகை புரியும் உணவு வளாகங்கள்
இன்னும் ஜாக்கிமின் ஹலால் சான்றிதழைப் பெறாமலிருக்கும் விவகாரம்
குறித்தும் ஹலால் சான்றிதழ் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முன்னெடுப்புகள் குறித்தும் பாகான் செராய் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோ இட்ரிஸ் அகமது பிரதமரிடம் கேள்வியெழுப்புவார்.


