NATIONAL

தீபாவளி விடுமுறையின் போது 6,013 சாலை விபத்துகள் பதிவு- 60 பேர் உயிரிழப்பு

5 நவம்பர் 2024, 9:17 AM
தீபாவளி விடுமுறையின் போது 6,013 சாலை விபத்துகள் பதிவு- 60 பேர் உயிரிழப்பு

கோலாலம்பூர், நவ. 5: தீபாவளிப் பண்டிகையின் போது நிகழ்ந்த  பெரும்பாலான மரண  விபத்துகளுக்கு  பொறுப்பற்ற மற்றும் அபாயகரமான முறையில்  வாகனங்களைச் செலுத்தியது முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது.

கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்ற  தீபாவளி கொண்டாட்டத்தின் போது  நாடு முழுவதும்  6,013 விபத்துகளும்  60 இறப்புகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது யூஸ்ரி ஹாசன் பஸ்ரி கூறினார்.

இக்காலக்கட்டத்தில்  நாடு முழுவதும்  சோதனை 388 நடவடிக்கைகளை மேற்கொண்ட போக்குவரத்து போலீசார்,  பல்வேறு சாலைக் குற்றங்களுக்காக 97 நபர்களை கைது செய்து  647 வாகனங்களை பறிமுதல் செய்தனர் என்று அவர் சொன்னார்.

1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்  கீழ் சம்பந்தப்பட்ட 91 பேரும்  கைது செய்யப்பட்டனர்.  அபாயகர போதைப் பொருள் சட்டத்தின்  கீழ் மூவரும்   தண்டனைச் சட்டத்தின் கீழ் இருவரும் மற்றும் பிற குற்றங்கள் தொடர்பில் ஒருவரும் கைது செய்யப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

இன்று  புக்கிட் அமான் சாலை போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் மாதாந்திர இயக்குநர் கூட்டத்திற்குப் பின்னர்   செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.

இக்காலகட்டத்தில் தாங்கள் 119 ஓப் சம்சிங் சோதனை  நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 42 (1) பிரிவின் கீழ் பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக   45 பேர் தடுத்து வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில்,  கடந்த ஆகஸ்டு 12 முதல் செப்டம்பர் 12 வரை 2,461 சாலைக் குற்றங்கள் தொடர்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை 10.01 சதவீதம் குறைந்துள்ளது என்று யுஸ்ரி கூறினார். முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் 2,735 வழக்குகள் பதிவாகியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.