டஹாட் டத்து, நவ. 4 - உள்நாட்டு ஆடவர் ஒருவர் படுகொலை
செய்யப்பட்டது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக அவ்வாடவரின்
மனைவி உள்பட நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்குள்ள ஜாலான் பொய்க் பத்து 3, சாலை சந்திப்பில் கடந்த
வியாழக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் 51 வயதுடைய ஆடவர்
உயிரிழந்ததாக லஹாட் டத்து மாவட்ட துணைப் போலீஸ் தலைவர்
சூப்ரிண்டெண்டன் ஜிம்மி பான்யு கூறினார்.
அன்றைய தினம் பிற்பகல் 12.45 மணியளவில் போலீசாரைத் தொடர்பு
கொண்ட அந்த பெண்மணி தன் கணவர் படுகொலை செய்யப்பட்டத்
தகவலைத் தெரிவித்ததாக அவர் சொன்னார்.
இச்சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்த ஆடவரின் உடலை
சோதனை செய்த போது உடலில் வலது கன்னம், தலையின் பின்புறம்
மற்றும் இடது நெற்றியில் வெட்டுக் காயங்களும் வலது மார்பு, முதுகு
மற்றும் இடுப்பில் வீக்கமும் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக அவ்வாடவரின் உடல்
லஹாட் டத்து மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு கொண்டுச்
செல்லப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் ஊகங்களை வெளியிட
வேண்டாம் என பொது மக்களைக் கேட்டுக் கொண்ட அவர், இம்மரணம்
தொடர்பில் தமது தரப்பு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி
வருகிறது என்றார்.
இச்சம்பவம் கொலை என வகைப்படுத்தப்பட்டு குற்றவியல் சட்டத்தின்
302வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அவர்
சொன்னார்.


