ஷா ஆலம், அக். 31- சிலாங்கூர் அரசு ஒரு இனத்தின் நலனை மட்டும் காக்கவில்லை. மாறாக, இந்திய சமூகம் உள்பட அனைத்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அது
முன்னுரிமை- அளிப்பதாக மந்திரி புசார் கூறினார்..
அனைத்து நிலையிலான மக்களுக்கு மாநில அரசு உதவிகளை நல்கி
வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
தன்மானமிக்க மாநில மக்களுக்கு மகிழ்ச்சியையும் சுபிட்சத்தையும்
வழங்கும் மாநில அரசின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப இந்நடவடிக்கை
மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் சொன்னார்.
உலு சிலாங்கூர் மற்றும் கோல சிலாங்கூரில் உள்ள ஐந்து
தோட்டங்களைச் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எதிர்நோக்கிய
வீட்டுடைமைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு வீடமைப்பு மற்றும் ஊராட்சித்
துறை அமைச்சின் ஓத்துழைப்புடன் 7 கோடியே 50 லட்சம் வெள்ளியை
மாநில அரசு ஒதுக்கியுள்ளது என்று அவர் சொன்னார்.
மேரி தோட்டம், மின்யாக் தோட்டம், சுங்கை திங்கி தோட்டம், நைகல்
கார்டனர் தோட்டம், புக்கிட் தாகார் தோட்டம் ஆகிய ஐந்து
தோட்டங்களும் நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த வீட்டுமைப்
பிரச்சனையை மலேசியா மடாணி மற்றும் கித்தா சிலாங்கூர் உணர்வின்
அடிப்படையில் இரு அரசுகளும் 7.5 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளன.
மக்கள் நலன் காக்கும் மாநில அரசின் முயற்சிகளுக்கு இந்த முன்னெடுப்பு
ஒரு சிறந்த முன்னுதாரணமாகும். மாநில அரசு அனைத்து இனங்களின்
நலனையும் காக்கிறது. ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள்
எதிர்நோக்கிய வீட்டுடைமைப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதும் அதில்
அடங்கும் என்றார் அவர்.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளைத் தரம்
உயர்த்துவதற்கு மாநில அரசு 5 கோடியே 96 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடூ
செய்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தவிர, கடந்த 2013ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு வரும்
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பள்ளி பேருந்துக் கட்டண உதவித்
திட்டத்தின் வழி 26,200 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். வசதி குறைந்த
குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாதம் 300 வெள்ளி வழங்க
வகை செய்யும் இந்த திட்டத்திற்கு இதுவரை 78 லட்சத்து 70 ஆயிரம்
வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சமூகம் வழிபாட்டுத் தலங்களுக்கும் மாநில அரசு தொடர்ந்து
உதவி வருகிறது. ஆலய நிர்மாணிப்புக்காக 10,000 சதுர அடி நிலங்களை
அது ஆர்ஜிதம் செய்துள்ளது என்று அவர் தனது பேஸ்புக் பதிவில்
குறிப்பிட்டார்.
இன்று கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை சிலாங்கூரிலுள்ள அனைத்து
இன மக்களையும் ஒரே சமூகமாக ஒன்றிணைக்கும் திருநாளாக விளங்கும்
எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.








