ஷா ஆலம், அக். 29 - தனக்கு அளிக்கப்பட்ட லஞ்சப் பரிவர்த்தனை குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்யத் தவறியதாக விமான நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆயிரம் வெள்ளியை கையூட்டாகப் பெற்றதாக 35 வயதான முகமது ரசிஃப் ஹசான் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இன்ஜினியரிங் நிறுவனத்துக்கும் விமான நிறுவனத்துக்கும் இடையிலான ஒரு வணிக ஒப்பந்தத்தை விரைவுபடுத்த உதவுவதற்கு கைமாறாக 52 வயதுடைய நபர் ஒருவர் இந்த பணத்தை இணையம் வழி அவரது வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி உலு லங்காட், பண்டார் துன் ஹுசேன் ஒன்னில் உள்ள வங்கியில் இந்தக் குற்றத்தைச் புரிந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 100,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 25(1)வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்டவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 1,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க
நீதிபதி டத்தோ முகமது நாசீர் நோர்டின் அனுமதித்தார்.
தனது கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், மாதத்திற்கு ஒருமுறை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும், சாட்சிகளை மிரட்டக் கூடாது என்றும் அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


