ஜாசின், அக். 29- பேஸ்புக் பக்கத்தில் விளம்பரம் செய்யப்பட்ட இல்லாத
முதலீட்டுத் திட்டத்தை நம்பி இல்லத்தரசி ஒருவர் 82,175 வெள்ளியை
இழந்தார்.
தனியார் நிறுவனம் ஒன்றின் முன்னாள் செயலாளரான 50 வயதுடைய
அந்த மாது கடந்த ஜூலை மாதம் சமூக ஊடகத்தில் வெளியான
முதலீட்டு விளம்பரத்தால் கவரப்பட்டதாக ஜாசின் மாவட்ட போலீஸ்
தலைவர் டிஎஸ்பி அகமது ஜாமில் ராட்ஸி கூறினார்.
அந்த விளம்பரத்தில் காணப்பட்ட இணைப்பை அம்மாது சொடுக்கியவுடன்
வாட்ஸ்ஆப் மூலம் சந்தேக நபர் அவரைத் தொடர்பு கொண்டதாக அகமது
ஜாமில் தெரிவித்தார்.
அந்த முதலீட்டுத் திட்டம் தொடர்பில் சந்தேக நபர் அம்மாதுவுக்கு
விளக்கமளித்த தோடு முதலீட்டுத் திட்டத்தில் சேர ஆர்வம் இருக்கும்
பட்சத்தில் பதிவுக் கட்டணமாக 1,235 வெள்ளியைச் செலுத்தும்படி கேட்டுக்
கொண்டுள்ளார்.
பதிவு முடிந்தவுடன், “இந்த முதலீட்டின் வழி உங்களுக்கு 8,000 வெள்ளி
லாபம் கிடைத்துள்ளது“ என்று அந்த சந்தேக நபர் கூறியுள்ளார். இந்த
லாபத்தினால் பெரிதும் ஈர்க்கப்பட்ட அம்மாது அதிக லாபத்தை பெறும்
நோக்கில் பெரும் தொகையை அந்த திட்டத்தில் முதலீடு செய்துள்ளார்
என அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
தனது இருபது ஆண்டுகால சேமிப்புத் தொகையை ஊழியர் சேம நிதி
வாரியத்திலிருந்து மீட்ட அவர், மொத்தம் 82,175 வெள்ளியை பல்வேறு
வங்கிக் கணக்குகளில் சேர்த்துள்ளார் என அவர் மேலும் சொன்னார்.
எனினும், லாபத் தொகையை மீட்க இயலாமல் போனதோடு லாபத்
தொகையை மீட்பதற்கு வரியாக 20,000 வெள்ளியைச் செலுத்தும்படி
மோடிசக் கும்பல் கூறியதைத் தொடர்ந்து தாம் ஏமாற்றப்பட்டதை அம்மாது
உணர்ந்துள்ளார் என்றார் அவர்.
இந்த மோசடி தொடர்பில் அம்மாது ஜாசின் போலீஸ் நிலையத்தில் புகார்
செய்ததாகக் கூறிய அவர், இந்த புகார் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின்
420வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.


