கோலாலம்பூர், அக். 29 - ரோன்95 பெட்ரோலுக்கான இலக்கு மானியம்
மற்றும் பங்குகளை வைத்திருக்கும் தனி நபர்கள் 100,000 வெள்ளிக்கும்
மேல் பெறும் லாப ஈவுக்கு இரண்டு விழுக்காடு வரி விதிக்கும் திட்டம்
உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இன்றைய மக்களவைக் கூட்டத்தில்
விவாதிக்கப்படும்.
இன்றைய அமைச்சர்கள் கேள்வி நேரத்தின் போது கோத்தா மலாக்கா
தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் கூ போய் தியோங் பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் இந்த கேள்வியை எழுப்புவார் என
நாடாளுமன்ற அகப்பக்கத்தில் வெளியிடப்பட்ட இன்றைய கூட்ட நிகழ்ச்சி
நிரவில் குறிப்பிடப்பட்டுள்து.
கோலாலம்பூர், ஜாலான் டூத்தாவிலுள்ள 106.54 ஹெக்டர் நிலத்தை
கூட்டரசு அரசாங்கம் செமெந்தான் எஸ்டேட் சென். பெர்ஹாட்
நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின்
உத்தரவைத் தொடர்ந்து இவ்விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம்
எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கோத்தா பாரு தொகுதி
பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசான்
பிரதமரிடம் வினவுவார்.
தலைநகரில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை
பராமரிப்பது மற்றும் தரம் உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் திட்டம்
குறித்து பாலிக் பூலாவ் தொகுதி ஹராப்பான் உறுப்பினர் முகமது பக்தியார்
வான் சிக் வினா தொடுப்பார்.
கேள்வி-பதில் அங்கத்திற்கு பிறகு கடந்த 18ஆம் தேதி பிரதமர் தாக்கல்
செய்த 2025ஆம் ஆண்டிற்கான விநியோகச் சட்ட மசோதா (வரவு செலவுத்
திட்டம்) மீதான விவாதம் தொடரும்.
இந்த சட்ட மசோதா தொடர்பான விவாத்தில் இதுவரை 105 ஆளும் கட்சி,
எதிர்க்கட்சி மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள்
கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில்
மக்களவைக் கூட்டம் நடைபெறாது.


