ஷா ஆலம், அக். 28 - இம்மாதம் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை
கொண்டாடப்படவுள்ள வேளையில் நாட்டிலுள்ள இந்துக்கள்
பெருநாளுக்கான ஏற்பாடுகளை பரபரப்பாகச் செய்து வருகின்றனர்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் வசதி குறைந்தவர்களின் நலனும்
புறக்கணிக்கப்படக் கூடாது என்பதில் மாநில அரசு உறுதியாக இருந்து
வருகிறது.
இதன் அடிப்படையில் தீபாவளியை முன்னிட்டு வசதி குறைந்தவர்களுக்கு
தீபாவளி ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை வழங்கும் நிகழ்வுகளை
அனைத்து தொகுதிகளிலும் அது நடத்தி வருகிறது.
பாண்டான் சட்டமன்றத் தொகுதியின் ஏற்பாட்டிலான பற்றுச் சீட்டுகளை
வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக் கிழமை நேற்று சிறப்பாக
நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பாண்டான் இண்டா சட்டமன்ற
உறுப்பினரும் அடிப்படை வசதிகள் மற்றும் விவசாயத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினருமான இஷாம் ஹஷிம் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்வில் 305 பேருக்கு தலா 200 வெள்ளி மாநில அரசின் ஷோம்
பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்ட வேளையில் மேலும் 250 பேருக்கு கோழி,
சமையல் எண்ணெய், தீபாவளி பலகாரங்கள் உள்ளிட்ட பொருள்கள்
அடங்கிய உணவுக் கூடை வழங்கப்பட்டது.
தொகுதியிலுள்ள அனைத்து இந்துக்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொண்ட இஷாம், இந்த உதவிப் பொருள்கள் தீபாவளியைக்
கொண்டாடுவதில் வசதி குறைந்தவர்கள் எதிர்நோக்கும் சிரமத்தை ஓரளவு
குறைக்கும் எனத் தாம் நம்புவதாகத் தெரிவித்தார்.


