ஜோர்ஜ் டவுன், அக் 28: லெபுஹ் துங்கு குடின்,குளுகோரில் உள்ள குடியிருப்பு ஒன்றின் 12வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நான்கு வயது சிறுவன் தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருவதாக வடகிழக்கு மாவட்ட காவல்துறையின் செயல் தலைவர் சுப்ரிட்டெண் லீ ஸ்வீ சாக் தெரிவித்தார்.
"அச்சிறுவனின் குடும்பத்தினரின் சாட்சியத்தின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர் நிலை சீராக உள்ளது மற்றும் 48 மணி நேரம் கண்காணிப்புக்காக ICU இல் சிகிச்சை பெறு வருகிறார்," என்று லீ ஸ்வீ தொடர்பு கொண்டபோது கூறினார்.
சம்பவத்தைப் பார்த்த பெற்றோர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட மேல் விசாரணைகள் இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குழந்தைகள் சட்டம் 2001 பிரிவு 31(1)(a) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
காலை 9.20 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் சிறுவன் தனது வீட்டின் படுக்கை அறையில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
– பெர்னாமா


