கிள்ளான், அக். 28 - தீபாவளி விற்பனை பரபரப்பாக நடைபெற்று வரும்
கிள்ளான், ஜாலான் துங்கு கிளானாவில் உள்ள லிட்டில் இந்தியா பகுதிக்கு
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று வருகை புரிந்தார்.
சுமார் 45 நிமிடங்களை அங்கு செலவிட்ட அவர், ஜாலான் துங்கு கிளானா
மற்றும் தீபாவளி சந்தை நடைபெறும் பகுதிகளில் வணிகர்கள் மற்றும்
பொது மக்களைச் சந்தித்து கலந்துரையதோடு தீபாவளியை முன்னிட்டு
தலா 10 வெள்ளி மதிப்புள்ள ரஹ்மா டிஜிட்டல் பற்றுச் சீட்டுகளையும் 500
பேருக்கு விநியோகித்தார். மேலும் மந்திரி புசாரிடமிருந்து தீபாவளி
ரொக்க அன்பளிப்பை பெறும் வாய்ப்பினையும் சிறார்கள் பெற்றனர்.
சிறு வணிகங்களை இலக்கவியல்மயமாக்கும் மாநில அரசின் திட்டத்தின்
கீழ் உருவாக்கப்ட்டுள்ள பிளாட்ஸ் எனப்படும் பிளாட்ஃபார்ம் சிலாங்கூர்
அமைப்பின் ஏற்பாட்டில் இந்த வருகையை மந்திரி புசார் மேற்கொண்டார்.
வர்த்தர்கள் மத்தியில் இலக்கவியல் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில்
இந்த வருகையை தாம் மேற்கொண்டதாக மந்திரி புசார்
செய்தியாளர்களிடம் கூறினார்.
இலக்கவியல் மாற்றத்திற்கான முன்னெடுப்பாகவும் பிளாட்ஸ் திட்டத்தில்
பதிந்து கொள்வதன் மூலம் இலக்கவியல் முறையில் வணிகத்தை
மேற்கொள்வதற்கு வாய்ப்பினை வழங்கும் முயற்சியாகவும் தமது இந்த
பயணம் அமைந்துள்ளது என்று அவர் சொன்னார்.
இன்றைய இலக்கவியல் உலகில் வர்த்தகத் துறையில் இலக்கவியல்
யுகத்திற்கு வணிகர்கள் மாறுவதற்குரிய நுழைவாயிலாக இந்த பிளாட்ஸ்
அமைப்பு விளங்குகிறது என்று அவர் சொன்னார்.
மந்திரி புசாரின் இந்த பயணத்தில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர்
டாக்டர் ஜி.குணராஜ், பிளாட்ஸ் நிர்வாகி கென்னத் சேம் ஆகியோர் இடம்
பெற்றிருந்தனர்.


