கோலாலம்பூர், அக். 28 - இலக்கவியல் உலகில் ஏற்பட்டு வரும்
திருப்பங்களுக்கு ஏற்ப ஊடக அமைப்பு முறையிலும் மாற்றங்கள்
ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு தொழில்நுட்ப யுகத்தை
எதிர்கொள்வதற்கான வழிவகைகளை கண்டறிவதில் ஒன்றுபட்டு
செயல்படுமாறு ஊடகவியலாளர்களை இலக்கவியல் துறை அமைச்சர்
கோபிந்த் சிங் டியோ கேட்டுக் கொண்டார்.
ஊடகத் துறையில் செயற்கை நுண்ணறிவின் ஊடுருவலை ஒரு
அச்சுறுத்தலாகப் பார்க்கக் கூடாது என்ற மலேசிய பத்திரிகை கழகத்தின்
தலைவர் டத்தோ யோங் சூ ஹியாங்கின் கருத்தை தாம் ஏற்றுக்
கொள்வதாக அவர் சொன்னார்.
மனிதத் தொடுதல் மற்றும் உண்மையான நிலவரங்களை மதிப்பீடு
செய்வதில் ஊடகவியலாளர்களின் ஆற்றல் இன்னும் தேவைப்படுகிறது
என்று அவர் குறிப்பிட்டார்.
தீமைகள் அழிந்து (இருள்) நன்மை (ஒளி) பிறப்பதை உணர்த்தும் தீபாவளி
திருநாளின் கோட்பாட்டிற்கு ஏற்ப சமுதாயத்தை உருவாக்குவதில்
இந்நாட்டிலுள்ள ஊடகங்கள் தொடர்ந்து முக்கிய பங்கினை ஆற்றி வரும்
என நான் நம்புகிறேன் என்று கோபிந்த் சிங் தனது பேஸ்புக் பக்கத்தில்
குறிப்பிட்டார்.
தலைநகர் ஜாலான் ஈப்போவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மலேசிய
தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் தீபாவளி பொது உபசரிப்புக்கு கோபிந்த்
சிங் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விருந்து நிகழ்வில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன்,
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு, புக்கிட் காசிங்
சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜீவ், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி ஒருஙகிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


