கிள்ளான், அக். 28 - இணையம் வழி விற்பனை நடவடிக்கைகள் அதிகரித்த
போதிலும் நாட்டிலுள்ள இந்துக்களின் பிரசித்தி பெற்ற தீபாவளி ஷாப்பிங்
மையமாக கிள்ளான், ஜாலான் துங்கு கிளானா, லிட்டில் இந்தியா
தொடர்ந்து விளங்கி வருகிறது.
மலிவான விலை மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ற
எண்ணற்றத் தேர்வுகள் போன்றவை பொது மக்களின் தேர்வுக்குரிய
விற்பனை மையமாகக் கிள்ளான் தொடர்ந்து விளங்குவதற்கு காரணமாக
உள்ளது.
அலையெனத் திரளும் மக்கள் கூட்டம், கடைகள் தோறும் ஒலிக்கும்
இனிய பாடல்கள், ஜொலிக்க வைக்கும் அலங்காரம் என கிள்ளான் லிட்டில்
இந்தியாவின் பிரமிக்க வைக்கும் காட்சிகள் இங்கு வருவோருக்கு
உற்சாகத்தையும் தீபாவளி குதூகல உணர்வையும் ஏற்படுத்துகின்றன.
தீபாவளி நெருங்கி வரும் நிலையில் தங்களுக்குத் தேவையான
பொருள்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் திரண்டு வரும்
நிலையில் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி மலிவான விலையில்
பொருள்களை விற்பதில் வர்த்தகர்களும் முனைப்பு காட்டுகின்றனர்.
பொருள்கள் குறிப்பாக ஆடைகள் கோலாலம்பூர் மற்றும் கிளந்தான்
மாநிலத்தின் கோத்தா பாருவை விட குறைவாக உள்ளதால் கிள்ளான்,
லிட்டில் இந்தியா பகுதி பல ஆண்டுகளாக தனது தேர்வுக்குரிய இடமாக
விளங்கி வருவதாகக் கிளந்தான் கோலக் கிராய் வட்டாரத்தை பூர்வீகமாகக்
கொண்ட ஜோன் முருகன் (வயது 63) கூறினார்.
தீபாவளிக்கு புதிதாக வந்துள்ள பொருள்களை வாங்குவதற்காக
குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கிளந்தானிலிருந்து தாம் இங்கு
வந்ததாக அவர் சொன்னார். இதர இடங்களைக் காட்டிலும் இங்கு
பொருள்கள் 30 முதல் 50 விழுக்காடு மலிவு விலையில்
விற்கப்படுகின்றன. நாட்டின் பிரதான துறைமுகத்திற்கு அருகில் கிள்ளான்
நகர் அமைந்திருப்பது இந்த விலைக்குறைவுக்கு காரணமாக இருக்கலாம்
என அவர் தெரிவித்தார்.
விலை மலிவு காரணமாக எங்களுடைய இரு கார்களும் முழுமையாக
நிரம்பும் அளவுக்கு பொருள்களை வாங்கி விட்டோம். பொருள்களின்
தரமும் திருப்திகரமாக உள்ளது என்று அவர் சொன்னார்.
கடந்த சில ஆண்டுகளாக கோலாலம்பூரில் வேலை செய்து வரும் தமக்கு
கிள்ளான், லிட்டில் இந்தியா தேர்வுக்குரிய ஷாப்பிங் மையமாக விளங்கி
வருவதாக தனியார் துறை பணியாளரான எம்.துர்காஷினி (வயது 28)
கூறினார்.
கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு கிள்ளானில்
வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக வணிகரான
எஸ். ஸ்ரீ (வயது 48) தெரிவித்தார். கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும்
மலிவான விலையில் பொருள்களை வாங்குவதற்காகவும் பெரும்பாலான
இளையோர் இணையத்தை நாடியதன் காரணமாக முன்பு இங்கு விற்பனை
குறைந்து காணப்பட்டது என்றார் அவர்.


