ஈப்போ, அக். 25- சுற்றுப்பயணிகள் பயணம் செய்த பேருந்து டிரெய்லர் லோரியின் பின்புறம் மோதியதில் ஜப்பானியர்கள் உள்பட 13 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 230.3வது கிலோ மீட்டரில் தைப்பிங் அருகில் நேற்று பிற்பகல் நிகழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், சுற்றுலா வழிகாட்டி ஆகியோரோடு மூன்று ஆண்கள் மற்றும் எட்டு பெண்களை உள்ளடக்கிய 11 ஜப்பானியர்களும் காயமடைந்ததாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் சபாரோட்சி நோர் அகமது கூறினார்.
காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக தைப்பிங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த விபத்தின் காரணமாக பேருந்தின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்ட தீயணைப்பாளர்கள் அவர்களுக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் இ.எம்.ஆர்.எஸ். வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர் என்றார் அவர்.








