ஷா ஆலம், அக். 25 - உலு கிளாங், தாமான் மெலாவதியில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் குறித்த முழு அறிக்கையும் விரைவில் சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை மன்றத்திடம் தாக்கல் செய்யப்படும்.
மேல் நடவடிக்கைக்காக பொருளாதார நடவடிக்கை மன்றத்திடம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் அந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகளை தாம் மதிப்பாய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இதன் தொடர்பான அறிக்கை பெறப்பட்டது. பொருளாதார நடவடிக்கை மன்றத்திடம் அது வழங்கப்படும். இப்போது நான் முதலில் அறிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் நிலச்சரிவு சம்பவம் தொடர்பான விசாரணையின் சமீபத்திய நிலவரங்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் காவல்துறை தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற மூன்று சிறப்பு சம்பவ பகுதி கட்டுப்பாட்டு மையங்களுக்கான தற்காலிக கூடாரங்களை ஒப்படைக்கும் நிகழ்விற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
சம்பவப் பகுதி பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்டுள்ள வேளையில் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ள பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமிருடின் கூறினார்.
நிலச்சரிவு மீண்டும் ஏற்பட்டால் ஏதேனும் பாதகமான விளைவுகளை குறைக்க உதவும் வகையில் தடுப்புச் சுவரை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் அமைத்துள்ளது என்றார் அவர்.
தாமான் மெலவத்தி, ஜாலான் இ6 பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் குறித்து கனிமவளம் மற்றும் புவி அறிவியல் துறை விரிவான விசாரணை நடத்தி வருவதாக அமிருடின் முன்னதாக கூறியிருந்தார்.
அக்டோபர் 15ஆம் தேதி நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக அருகிலுள்ள வீடுகளில் வசிக்கும் 20 பேரை தற்காலிக நிவாரண மையத்திற்கு வெளியேற்ற காவல்துறைக்கு உத்தரவிட்டது.






