கோலாலம்பூர், அக். 24- தலைநகரில் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு
காண்பது அதிகாரிகளின் முதன்மை பணி இலக்காக விளங்கும் என்று
பிரதமர் துறை அமைச்சர் (கூட்டரசு பிரதேசம்) டாக்டர் ஜலேஹா
முஸ்தாபா கூறினார்.
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி நடைபெற்ற ஆசியான் உச்சநிலை
மாநாட்டின் போது அந்த அமைப்பின் தலைவர் பதவியை
லாவோசிடமிருந்து மலேசியா ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து வெள்ளத்
தடுப்பு விவகாரத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியுள்ளதாக
அவர் சொன்னார்.
நாட்டின் பிரதான நுழைவாயிலாகவும் தலைநகருக்குரிய அந்தஸ்தோடு
பிராந்திய பொருளாதார மையமாகவும் கோலாலம்பூர் விளங்குவதை
தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆசியான் தலைவர் பொறுப்பை வரும் 2025ஆம் ஆண்டில் ஏற்கவுள்ள
நிலையிலும் மலேசியாவுக்கு வருகை தாருங்கள் ஆண்டு இயக்கத்தை
வரும் 2026ஆம் ஆண்டில் நடத்தவிருக்கும் நிலையிலும் கோலாலம்பூரை
அழகுப்படுத்துவது மற்றும் மாநகரின் நலன் காப்பது கோலாலம்பூர் மாநகர்
மன்றத்தின் பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த தயார் நிலை ஒருங்கிணைந்த முயற்சிகளை உள்ளடக்கியுள்ளது.
ஊராட்சி மன்றம் என்ற முறையில் கோலாலம்பூர் மாநகர் மன்றம்
மட்டுமின்றி வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை, திடக்கழிவு மேலாண்மை
மற்றும் பொது துப்புரவு கழகம், ஆலாம் புளோரா ஆகிய நிறுவனங்களின்
பங்களிப்பும் இதில் தேவைப்படுகிறது என்று அவர் சொன்னார்.
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது அமைச்சர் இவ்வாறு
தெரிவித்தார். நாட்டின் தோற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய
வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத நிலையில் 2025ஆம் ஆண்டு ஆசியான் தலைவர் பதவியை ஏற்பது மற்றும் 2026 மலேசியாவுக்கு வருகை தாருங்கள் இயக்கம் ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான கோலாலம்பூரின் தயார் நிலை குறித்து பத்து பகாட் உறுப்பினர் ஓன் அபு பாக்கார் கேள்வி எழுப்பியிருந்தார்.


