ஈப்போ, அக். 24- கிரீக் மற்றும் ஜெலியை இணைக்கும் கிழக்கு-மேற்கு
சாலையின் நினைவுச் சின்னம் அருகே காட்டு யானைகள் தாக்கியதில் பல
வாகனங்கள் சேதமடைந்தது தொடர்பில் தாங்கள் புகாரைப் பெற்றுள்ளதாக
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காத் துறை (பெர்ஹிலித்தான்)
கூறியது.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்றிரவு 10.00 மணியளவில் புகார்
கிடைத்ததைத் தொடர்ந்து எட்டு பெர்ஹிலித்தான் உறுப்பினர்களைக்
கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அத்துறையின்
இயக்குநர் யூசுப் ஷாரிப் கூறினார்.
வேட்டுச் சத்தம் கிளப்பி விரட்டும் அணுகுமுறையைப் பயன்படுத்தி அந்த
யானைகளை அப்பணியாளர்கள் அங்கிருந்து விரட்டியதாக அவர்
தெரிவித்தார்.
இரவு 9.00 மணிளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தின் போது அந்த இடத்தில் 25
முதல் 30 யானைகள் வரை இருந்ததாக அவர் பெர்னாமா தொடர்பு
கொண்ட போது குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிருடற்சேதம் ஏற்படவில்லை என்று
அவர் மேலும் சொன்னார்.


