பெய்ரூட், அக். 23 - பெய்ரூட்டின் முக்கிய அரசு மருத்துவமனை அருகே கடந்த திங்கள் கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நான்கு சிறார்கள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் மேலும் 60 பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் பெய்ரூட்டில் உள்ள ரஃபிக் ஹரிரி பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஹெஸ்புல்லா இலக்கைத் தாக்கியதாகவும் ஆனால், மருத்துவமனையை குறிவைக்கவில்லை என்றும் இஸ்ரேலிய இராணுவம் கூறியது.
இருப்பினும், இஸ்ரேலிய தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த வெடிமருந்துகளால் சிதறியப் பொருள்கள் மருத்துவமனைக்கு சேதம் விளைவித்திருக்கலாம் என்று மருத்துவமனையின் இயக்குனர் ஜிஹாத் சாதே குறிப்பிட்டார்.
இந்த தாக்குதலால் மருத்துவமனை ஊழியர்களுக்கு உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் மருத்துவமனையின் முன் மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்


