சிப்பாங், அக். 23- இம்மாதம் 6 மற்றும் 20ஆம் தேதிகளில் பண்டார் பாரு
சாலாக் திங்கி வட்டாரத்தில் நிகழ்ந்த ஆயுமேந்திய கொள்ளைச்
சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் அந்நிய
பிரஜைகள் அடங்கி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
வீடுகளை உடைத்து உள்ளே புகுந்து குடும்ப உறுப்பினர்களைக்
கட்டிப்போட்டு பொருள்களை கொள்ளையிட்டது தொடர்பில் இரு புகார்கள்
தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக சிப்பாங் மாவட்ட இடைக்கால
போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஷான் கோபால் கிருஷ்ணன்
கூறினார்.
கடந்த அக்டோபர் 6ஆம் தேதி விடிற்காலை 3.30 மணிக்கும் 20ஆம் தேதி
விடியற்காலை 1.30 மணிக்கும் அவ்விரு வீடுகளிலும் நுழைந்த
அக்கொள்ளையர்கள் ரொக்கம், தங்க ஆபரணங்கள், கைக்கடிகாரங்கள்
உளிட்ட பொருள்களுடன் தப்பியதாக அவர் சொன்னார்.
மூன்று முதல் நான்கு பேரை உள்ளடக்கிய இந்த அந்நிய நாட்டுக் கும்பல்
கருப்பு உடைகள் மற்றும் முகமூடி அணிந்து பாராங்கத்தியுடன்
கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவது வழக்கம் என அவர் குறிப்பிட்டார்.
காடுகளுக்கு அருகிலுள்ள வீடுகளை இக்கும்பல் குறி வைப்பது வழக்கம்
என்று அவர் நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறினார்.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரையிலான
சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல்
சட்டத்தின் 395/397வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
என்றார் அவர்.


