ஷா ஆலம், அக். 23 - மாற்றுத் திறனாளிகள் உள்பட வாய்ப்பு குறைந்த
தரப்பினருக்காகப் பிரத்தியேக வேலை வாய்ப்புச் சந்தையை மாநில அரசு
நடத்துகிறது. இந்த வேலை வாய்ப்புச் சந்தை இம்மாதம் 28ஆம் தேதி
இங்குள்ள எம்.பி.எஸ்.ஏ. மாநாட்டு மையத்தில் நடைபெறும்.
சாதாரண துறைகள் தொடங்கி நிணத்துவத் துறைகள் வரை பல்வேறு
வேலை வாய்ப்புகளை வழங்கும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையில்
அரசாங்க மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த 40 நிறுவனங்கள்
பங்கேற்பதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
வேலை வாயப்புகளை வலுப்படுத்தி அதன் மூலம் முழுமையான
சமூகத்தை உருவாக்கும் மாநில அரசின் கடப்பாட்டின் அடிப்படையில்
இந்த மலிவு விற்பனை நடத்தப்படுவதாக அவர் சொன்னார்.
வாய்ப்பு குறைந்த தரப்பினர் குறிப்பாக மாற்றுத் திறனாளிகள், பூர்வக்
குடியினர், ஏழைகள், முன்னாள் கைதிகள், மூத்த குடிமக்கள்,
இல்லத்தரசிகள், கைவிடப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகளை
ஏற்படுத்தித் தரும் நோக்கில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று
அவர் குறிப்பிட்டார்.
வேலை வாய்ப்புகளைப் பெறுவதில் இத்தரப்பினர் எப்போதும் சிரமத்தை
எதிர்நோக்கி வருகின்றனர். இவர்கள் தவிர்த்து பொது மக்களும் இந்த
வேலை வாய்ப்புச் சந்தையில் பங்கு கொள்ளலாம் என அவர் அறிக்கை
ஒன்றில் தெரிவித்தார்.
உடனடி நேர்காணலில் பங்கேற்பதற்கு ஏதுவாக இந்த வேலை வாய்ப்புச்
சந்தைக்கு வருவோர் தங்களின் சுயவிபரக் குறிப்பு உள்ளிட்ட
ஆவணங்களை உடன் கொண்டு வரும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
வேலை தேடுவோருக்கு உதவும் வகையில் ஒரு பிரத்தியேக தளத்தை
உருவாக்கித் தரும் கடப்பாட்டை மாநில அரசு கொண்டுள்ளது. இதன்
அடிப்படையில் வேலை வாய்ப்புச் சந்தை வேலை தேடுவோர் மத்தியில்
நேர்மறையாக தாக்கத்தை ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்
அவர்.


