(ஆர்.ராஜா)
செலாயாங், அக். 21- இம்மாதம் 21ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு செலாயாங் நகராண்மைக் கழகத்தின்
இந்திய பணியாளர்கள் சமூக நலப்பிரிவு “தீபாவளி ஒளிக்கதிர்“ எனும்
நிகழ்ச்சியை வெகு விமரிசையாக நடத்தியது.
இம்மாதம் 18ஆம் தேதி தாமான் ஸ்ரீ கோம்பாக், டேவான் பிரிங்கினில்
நடைபெற்ற இந்த நிகழ்வில் செலாயாங் நகராண்மைக் கழகத் தலைவரின்
சார்பில் நகராண்மைக் கழகத்தின் உதவிச் செயலாளர் ஹாஜி அஸ்ஹாரி
சம்சுடின் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அஸ்ஹாரி, இந்த தீபாவளி உபசரிப்பு
நிகழ்வை வெகு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த இந்தியப்
பணியாளர்கள் பிரிவின் தலைவர் எம்.முருகன் மற்றும் அவரின்
செயல்குழுவினருக்கு தாம் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்
கொள்வதாகக் கூறினார்.
நாட்டில் குறிப்பாக, செலாயாங் நகராண்மைக் கழக நிலையில் இன
ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் கலாசாரத்தை அறிந்து
கொள்வதற்கும் இந்நிகழ்வு வாய்ப்பினை ஏற்படுத்தும் என அவர்
சொன்னார்.
இந்த நிகழ்வில் செலாயாங் நகராண்மைக் கழக உறுப்பினர்கள்,
அதிகாரிகள், இந்தியப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்
உள்பட சுமார் 350 பேர் கலந்து கொண்டனர்.
இந்த தீபாவளி சிறப்பு நிகழ்வை செலாயாங் நகராண்மைக் கழகத்தின்
இந்திய பணியாளர்கள் பிரிவு கடந்த 21 ஆண்டுகளாக நடத்தி வருகிறது
என்பது குறிப்பிடத்தக்கது.
அறுசுவை உணவுடன் கூடிய இந்த உபசரிப்பில் படைக்கப்பட்ட மூவின
கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் நடனங்கள் நிகழ்வில் கலந்து
கொண்டவர்களைக் பெரிதும் கவர்ந்தன.


