(ஆர்.ராஜா)
கிள்ளான், அக். 21- கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ்
ஏற்பாட்டில் வசதி குறைந்த 300 குடும்பங்களுக்கு தலா 100 வெள்ளி
மதிப்பிலான தீபாவளி பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதில் வசதி குறைந்த குடும்பங்கள்
எதிர்நோக்கும் பொருளாதார சிக்கல்களைக் கருத்தில் கொண்டு இந்த
உதவித் திட்டத்தை தொகுதி சேவை மையம் ஏற்பாடு செய்திருந்தது.
கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மூன்று சட்டமன்றத்
தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் பி40
தரப்பைச் சேர்ந்த தலா 100 பேருக்கு இந்த பற்றுச்சீட்டுகள்
வழங்கப்பட்டதாகக் கிள்ளான் அரச மாநகர் மன்ற உறுப்பினர் அருள்நேசன்
ஜெயபாலன் கூறினார்.
கோலக் கிள்ளான் தொகுதி நிலையிலான பற்றுச் சீட்டு வழங்கும் நிகழ்வு
இம்மாதம் 19ஆம் தேதி கோலக் கிள்ளான், தாமான் கேம், ஸ்ரீ மகா
மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வேளையில் பண்டமாரான் தொகுதி
நிலையிலான நிகழ்வு நேற்று அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன்
ஆலயத்திலும் பண்டார் பாரு கிள்ளான் தொகுதி நிலையிலான நிகழ்வு
பத்து பிலா, மதுரை வீரன் ஆலயத்திலும் நடைபெற்றதாக அவர்
தெரிவித்தார்.
இந்த பற்றுச் சீட்டுகளைப் பெற்றவர்கள 99 ஸ்பீட்மார்ட் பல்நோக்கு
கடைகளில் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை
வாங்கிக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.
தீபாவளியை முன்னிட்டு வசதி குறைந்தவர்களுக்கு உதவுவதற்காக
தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் முன்னெடுத்துள்ள பல திட்டங்களில் இந்த பற்றுச் சீட்டு திட்டமும் ஒன்றாக விளங்குகிறது என்று அவர் சொன்னார்.


