கோலாலம்பூர், அக். 18- எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் மலேசியாவின்
பொருளாதாரம் 4.5 முதல் 5.5 விழுக்காடு வரை உயர்வு காணும் என
கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.8
முதல் 5.3 விழுக்காடு வரை இருந்ததாக நிதியமைச்சு கூறியது.
சேவைத் துறை மற்றும் தனியார் துறையின் தாராளச் செலவு, வலுவான
உலக வர்த்தகம் ஆகியவை காரணமாக பொருளாதாரம் சுறுசுறுப்படையும்
என்று அமைச்சு வெளியிட்ட 2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார
கண்ணோட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு 5.5 விழுக்காடு வளர்ச்சி காணும் என கணிக்கப்பட்டுள்ள
சேவைத் துறை சுற்றுலா, நிலையான ஏற்றுமதி நடவடிக்கைகள் மற்றும்
தகவல், தொடர்பு, தொழில்நும்ப நடவடிக்கைகள வாயிலாக நாட்டின்
பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்கும்.
இதனிடையே, உற்பத்தித் துறையும் அடுத்தாண்டு விரிவாக்கம் காணும்
என கருதப்படுகிறது. ஏற்றுமதி சார்ந்த தொழில்துறைகள் குறிப்பாக,
செமிகண்டக்டருக்கான தேவை அதிகரிப்பு காரணமாக மின்சாரம் மற்றும்
மின்னியல் துறைகள் உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு முக்கியப்
பங்காற்றும்.


