ஜோகூர் பாரு, அக். 17- போதைப் பொருள் கடத்தல் பேர்வழி என
சந்தேகிக்கப்படும் ஆடவரின் காரை டயரை நோக்கி போலீசார் மூன்று
முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இச்சம்பவம் இங்குள்ள ஜாலான்
டத்தோ அப்துல்லா தாஹிர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நேற்று
நிகழ்ந்தது.
மாலை 6.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் இருபத்தேழு
வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழியிடமிருந்து 296 கிராம் ஹெரோயின்
போதைப் பொருளை தாங்கள் கைப்பற்றியதாக ஜோகூர் மாநில போலீஸ்
தலைவர் டத்தோ எம்.குமார் கூறினார்.
அப்பகுதியில் ரோந்துக் காரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்
காரில் சென்று கொண்டிருந்த ஆடவன் ஒருவனின் நடவடிக்கையில்
சந்தேகம் கொண்டதாக அவர் சொன்னார்.
அந்த ஆடவன் ஓட்டிச் சென்ற காரை போலீசார் நிறுத்த முயன்றனர்.
எனினும் எனினும், அவ்வாடவன் காரை வேகமாகச் செலுத்தி அங்கிருந்து
தப்பிச் செல்ல முயன்றான். போலீசாரும் அவனைத் துரத்திச் சென்றனர்.
சுமார் ஐந்து நிமிட துரத்தல் நாடகத்திற்குப் பிறகு அக்கார்
நிறுத்துமிடம் ஒன்றில் நின்றது.
சரணடையப் போவதாக எண்ணி போலீசார் அந்த ஆடவனின் காரை
நோக்கிச் சென்றனர். எனினும் தீடீரென வேகமெடுத்த அவ்வாடவன்
சாலையின் எதிர்த்தடத்தில் பயணித்து மூன்று வாகனங்களை மோதித்
தள்ளி விட்டு தப்ப முயன்றான். இதனைத் தொடர்ந்து அவ்வாடவனைத்
தடுத்து நிறுத்தும் நோக்கில் அவனது காரை நோக்கி மூன்று துப்பாக்கிச்
சூடு நடத்தினர் என்றார் அவர்.
ஜோகூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் இன்று மாநில காவல்
துறையின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இச்சம்பவத்தின் போது அந்த ஆடவன் போதைப் பொருளை
உட்கொண்டிருந்த து சோதனையில் கண்டறியப்பட்டதாகக் கூறிய அவர்,
16 முந்தையக் குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ள அவ்வாடவன்
விசாரணைக்காக வரும் 23ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளான்
என்றார்.


